Sunday, August 13, 2017

.⧭ சிவ கைங்கர்யம் ...பூர்வ ஜென்ம பாக்கியம் ....⧭

அருள்மிகு ஆரியகும்பகேஸ்வரர் திருக்கோவில். ஆரியம்பாக்கம்

வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்னசத்திரம் சென்று இவ்வூரை அடையலாம் .மிக பழமையான சிவாலயம் சிதைந்து சுவாமியும்மிக பெரிய நந்தி மூர்த்தமும் வானம்பார்த்து அருள்பாலிக்கின்றனர் .

சாய்ந்திருந்த சிவலிங்க திருமேனியை குங்கிலிய கலய நாயனாரை மனதில் நினைத்து இத்திருப்பணியை தொடங்கினார்கள் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை யினர் .இத்திருபணியில் இக்கிராமமக்கள் திரளாக வந்து திருத்தொண்டு செய்தார்கள் .

.விரைவாக இங்கு திருக்கோவில் அமையவுள்ளது.அதற்கான முயற்சியை எடுத்து வருகிறார்கள் .அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பொருளாக மட்டும் தரலாம்.

சுவாமி திருவருளால் மேற்கூரைத்திருப்பணியும் , திருவேள்வியும் நடைபெற்றது .சிறப்பான வழிபாடு நடந்தேறியது இக்கிரமமக்கள் நந்தியம் பெருமானுக்கு அமைத்த மேற்கூரைக்கு Rs .15000 கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .

தொடர்புக்கு- திரு. சுமன் -9444163818.
-திரு.சுரேஷ்-7527015100




Tuesday, June 6, 2017

காசியினும் வீசம் அதிகம் 

மெய்யன்பர்களே , இறைவன் ருத்ரகோடீஸ்வரர் என்னும் பெயரை தாங்கிய திருகோயில்கள் மிகவும் குறைவு.
அதிலும் எதிரே மயான பூமியை பார்த்த வண்ணம் உள்ள திருகோயில்கள் மிக சிலவே(தற்போது இல்லை ). அத்தகைய திருகோயில்கள் சிறந்த பரிகார தலங்களாகும் .

கபில மகரிஷி , இறந்த தன் தந்தைக்கு காசியில் ஈம சடங்குகளை செய்ய எண்ணினார். அது சாத்தியமில்லாமல் போகவே இத்திருத்தலத்தில் அதனை நிறைவேற்றினார் . எனவே இத்தலம் காசியை விட வீசம் அதிகமாக
போற்றப்பட்டு வந்தது .
இறைவன் ருத்திரகோடீஸ்வரர், பேரழகு வாய்ந்த, மிக பருத்த திருமேனி உடையவர் .

பிதுர் நிவர்த்தி ஸ்தலமாக கருதப்படும் இத்தலம் திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகமையில்
மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடத்திலே தான் அமைந்துள்ளது .(காட்டு கார தெரு, சோழா திரையரங்கம் அருகில்)

ஆனால் கோவிலின் நிலை ???? கோமா நிலையில் இருக்கும் இத்திருகோயிலை மீட்டெடுப்பது நம் கையில் தான் உள்ளது .





Monday, May 29, 2017

மாதரசி வழிபட்ட மகாதேவன் 

கைலாசமுடையார் திருகோயில் , செம்பியன் மாதேவி , நாகை .மாவட்டம் .

செம்பியன் மாதேவி ,சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசி, கண்டராதித்த சோழனின் மனைவி , ராஜ ராஜ சோழனின் அத்தை யாவார்.
இளம் வயதிலேயே விதவையான இவர் கலைகளை மிகவும் ரசிப்பவர். 

வாழ்நாளில் பெரும்பகுதியை திருகோயில் திருப்பணிகளுக்காக ஒதுக்கினார் . இவர் கட்டிய கைலாசமுடையார் திருகோயில் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது . 

கண்டராதித்த சோழன் நான்கே ஆண்டுகள் அரசாட்சி புரிந்தாலும் , ஈடு இணையற்ற சிவ பக்தி உடையவராக  திகழ்ந்தார். பல்வேறு திருக்கோயில்கள் இவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டன ...
அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய மாமன்னராக  இருந்தாலும், இறைவனிடத்தே அளப்பரிய பக்தி கொண்டிருந்தனர். இறைபக்தியே, அவர்கள் தன்னலமற்ற அரசாட்சி  புரிவதற்கும் எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் காரணமாக இருந்தன. 

 மன்னர்கள் மட்டுமல்ல, அவர்களின் இல்லத்தரசிகளும்  ஏராளமான  திருக்கோயில்களை எழுப்பியும், புதுப்பித்தும் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். 

அவர்களுள்  மாதரசியான , செம்பியன் மாதேவி செய்துள்ள திருப்பணிகள் குறிப்பிட தகுந்தவை .....
செங்கற்களால் ஆனா பல திருகோயில்கள் அவரால் தான் கற்றளியாக மாற்றப்பட்டன ..

கோயிலை காட்டியதோடு நில்லாமல் ஏராளமான  மானியங்களையம்  பராமரிப்பிற்கென வழங்கியுள்ளார் 

திருவாரூர் அறநெறி, திருமுதுகுன்றம், திருநல்லம், திருமணஞ்சேரி, திருவக்கரை, திருச்சேலூர், திருத்துருத்தி, தென்குரங்காடுதுறை, திருக்கோடிக்கா, ஆனாங்கூர், திருத்துருத்தி, குத்தாலம் போன்ற தலங்களில் செங்கற்தளிகளாக இருந்த கோயில்களை கற்றளிகளாக எழுப்பி, திருப்பணிகள் செய்திருக்கிறார்.

இவரின் சிவபக்திக்கு சான்றாக இவர் கட்டிய பிரம்மாண்டமான கைலாசமுடையார் திருக்கோயில் இன்றும் நாகை மாவட்டத்தில் உள்ளது ...
வேத மந்திரங்களும் , திருவிழாக்களும் பூசைகளும்  சதா சர்வ காலமும் நிறைந்திருந்த இத்திருக்கோயில் பல்வேறு காரணங்களினால்  இன்று தன்  பொலிவை இழந்து , சீர்குலைய தொடங்கியது .....புதர்கள் மண்டி பார்க்கவே பரிதாபமாக விளங்கிய இத்திருக்கோயிலை கண்டு சகிக்காத கிராம மக்கள் திருப்பணியை தொடங்கியுள்ளனர் .


இந்து அறநிலைய துறை சார்பில் சில திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும் பிரம்மாண்டமான இத்திருக்கோயிலுக்கு அது கண்டிப்பாக போதுமானதாக இல்லை ....

அன்பர்களே பிரம்மாண்டமான திருக்கோயில் ..
ஏழை கிராம மக்களால் என்ன செய்ய இயலும் ? 
ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் வாருங்கள் மகேசன் திருக்கோயிலை ....
சோழ பேரரசியின் ஆன்மாவை மனம் குளிர செய்வோம் ....

வங்கி கணக்கு விபரங்கள் இதோ உங்களுக்காக :


உங்கள் கவனத்துக்கு

தலம்:      
செம்பியன்மாதேவி

இறைவன்: 
 ஸ்ரீகயிலாசநாதர்

இறைவி:
    
ஸ்ரீபெரியநாயகி

தீர்த்தம்:  
   
நான்மறை புஷ்கரணி

தலவிருட்சம்: 
அரசமரம்

திருவிழாக்கள்: 
சித்திரைத் திருவிழா, ஆனித் திருமஞ்சனம், சித்திரை கேட்டை நட்சத்திரத்தில் செம்பியன்மாதேவி பிறந்த நாள் என்று பல விழாக்கள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது:  நாகப்பட்டினத்தில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது செம்பியன்மாதேவி. செம்பியன்மாதேவி பிள்ளையார்கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினால், அருகிலேயே கோயிலை தரிசிக்கலாம். நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:

Account Holder(s) Name:
 N. Gnanasabapathi / G. Thirumalaisamy Punjab National Bank SembianMahadeviBranch 

Account Number     : 2842002100001026

IFSC Code:
           PUNB0284200

தொடர்புக்கு: குருமூர்த்தி, 9047743903.




.

Wednesday, May 24, 2017

இல்லாள் வருவாள் ......நல்லறம்   சிறக்க ......⧭
அன்பர்களே , இல்வாழ்க்கை துணை அமையும் இனிய நேரம் வரவில்லையா?
பரிகாரங்கள் பல செய்தும் பலனில்லையா ? கவலை வேண்டாம் !!
கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன் ?

வாருங்கள் திருமண மங்கலம் திருத்தலத்திற்கு . எங்கே உள்ளது இத்தலம் ?
குரு பகவான் அருள்புரியும் ஆலங்குடிக்கு வெகு அருகில் , நடை பயண தூரம் தான் .

இங்கு தான் ஆலங்குடி ஆபத்சஹாயேஸ்வர சுவாமிக்கும் , ஏலவார்குழலி அம்மைக்கும் திருமணம் நடை பெற்றது . இன்றும் பிரம்மோஸ்தவத்தின் போது , இறைவனின் திருமண உத்சவம் இங்கு தான் நடைபெறுகிறது . எனவே தான் இத்தலம் திருமண மங்கலம் (தற்போது திருவோண மங்கலம் ) என்று
அழைகப்படுகிறது .

மேலும் , மயானத்திற்கு நேர் எதிர் உள்ள வெகு சில தலங்களுள் இதுவும் ஒன்று . எனவே சிறந்த பரிகார தலமாக இது விளங்குகிறது . திருமண தடைக்கு இது மிக சிறந்த பரிகார தலம் .

இங்கு வந்து இறைவனை உளமார வழிபட திருமணம் உறுதி . இத்தனை சிறப்புகள் இருந்தும் அதிகம் அறியபடாத தலமாகவே இது இருந்து வருகிறது .

ஆலங்குடி குரு கோவிலின் வாசலிலேயே , இத்திருகோயிலின் அர்ச்சகர் வீடு உள்ளது .

அவரை கையோடு அழைத்து சென்று தரிசனம் செய்யலாம் .

படத்தில் இறைவன் விசாலேஸ்வரர் 




Tuesday, May 23, 2017

⧭ குன்றாத வளம் பல நல்கும் குன்னியூர் சிவாலயம்  ⧭

இறைவன் திருப்பெயர் விஸ்வநாதர் இறைவி விசாலாக்ஷி 
அன்பர்களே திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் ஏராளமான புராதனமான திருக்கோயில்கள் அமைந்துள்ளன ....
அவற்றுள் மிக புராதனமானதும் சக்தி வாய்ந்ததும் ஆன  குன்னியூர் சிவாலயம் பிரதான சாலையின் ஓரத்திலேயே அழகுற அமைந்துள்ளது ....

முன்புறம் சிறிய நந்தவனத்துடன் கூடிய சிறப்பாக பராமரிக்கப்படும் திருக்கோயில் ....
கருவறையில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தியுடன் வீற்றிருக்கிறார் இப்பெருமான் ....
ஆம்! இவரை வழிபடுவதால் குறையாத நலம் பல விளையும் ...செல்வ வளம் பெருகும் ..
வறுமை விட்டொழியும் ...முக்தி கிட்டும் ....
 விஸ்தாரணமான முன்மண்டபத்தில் வலப்புறம் பெரிய திருமேனியாக ஒரு லிங்கம் காணப்படுகிறது ..
ஒரே சுற்றுடன் விளங்கும் இத்திருக்கோயிலில் சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறையாக 
நடைபெறுகிறது .......தூய்மையான திருக்கோயில் ....சுற்றிலும் ஏராளமான பாடல் பெற்ற தலங்கள் சூழ விளங்கும் இந்த திருக்கோயிலை ஒருமுறை சென்று தரிசனம் செய்யுங்களேன் ......

அமைவிடம் :  திருவாரூர்----திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து ஏறத்தாழ 15 கிலோமீட்டர் ...



Sunday, April 2, 2017

நீண்ட நாட்பட்ட நோய்கள் நீங்க திரு ஈங்கோய் மலை வாங்க .......
மரகதாம்பிகை சமேத மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் .. 
இத்தல இறைவன் மரகதத்தால் ஆனவர் ....சிவராத்திரியின் போது 3 நாட்கள் சூரிய பூசை நிகழ்கிறது ...
அச்சமயம் லிங்கம் ஜோதி பிழம்பாக மிளிர்கிறது ....
தேவார பாடல் பெற்ற  தலங்களில் இத்தலம் 63 ஆவது தலமாகும் ....51 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்று ...
மலை மீது அமைந்துள்ள திருக்கோயில் 
திருக்கோயிலை அடைய 560 படிக்கட்டுகள் உள்ளன ...

தலபுராணம் .....
இறைவன் திருமணத்தின் போது உலகை சமன் படுத்த தென்திசை நோக்கி வந்த அகத்தியர் இத்தல இறைவனை 
வழிபட வந்தார் ...அவ்வமயம் கோயில் நடை சாற்றி விடவே , இறைவனை நோக்கி தனக்கு தரிசனம் அளிக்கும்படி வேண்டினார் ....இறைவன் அருளால் ஈ வடிவம் பெற்று கதவு இடுக்கின் வழியே சென்று இறைவன் 
முடித்து பின் தன் சுய வடிவம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது .....

எனவே தான் இத்தலம் ஈங்கோய்மலை என்றும் இறைவன் திருப்பெயர் ஈங்கோய்மலை நாதர் எனவும் அழைக்கப்படுகிறார் 

இறைவன் தீபாராதனையின் போது ஜோதி ஜொலிப்பதை காணலாம் ...
பௌர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷம் ...அன்று ஸ்வாமியும் அம்பாளும் கிரிவலம் செல்கின்றனர் ..
அச்சமயம் தரிசனம் செய்வோர்க்கு நீண்ட நாட்கள் தீராத நோய்கள் அனைத்தும் குணமடைவதாக நம்பிக்கை உள்ளது 

இருப்பிடம் :
திருச்சியிலிருந்து 43 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முசிரியிலிருந்து 7 கிலோமீட்டரில் 
உள்ளது இத்தலம் ....
காலை 9 மணி முதல் 6 மணி வரை நடை திறந்திருக்கும் ....
தொலைபேசி எண்கள் :
94439 50031
04326 262744



















Tuesday, March 7, 2017

இழக்கலாமா இத்தகைய அரிய 

பொக்கிஷங்களை?

அற்புத சிற்ப வேலைபாடுகள் நிறைந்த துக்காச்சி (துர்க்கை ஆட்சி) ஆபத்சகாயேஸ்வரர் திருகோயில்.
ஒரு காலத்தில் 7 பிரகாரங்களுடன் பிரம்மாண்டமாக விளங்கியதாம் . இரு திரு குளங்கள் கோவிலுக்குள்ளேயே விளங்கியது.
இன்று களை இழந்து , சோபையின்றி ,பக்தர்கள் வரவும் இன்றி , ஏகப்பட்ட இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது .
அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும் அது நிச்சயமாக போதுமானது அல்ல.
இறைவனின் எல்லையற்ற கருணையுடன், பக்தர்களின் பேராதரவும் அவசியம்.
பெயருக்கு ஏற்றாற்போல் துர்கை அம்மன் தனி சந்நிதி கொண்டு மிக எழிலுடன் வரப்ரசாதியாகவும் விளங்குகிறாள் .

இறைவன் திருப்பெயர் ஆபத்சகாயேஸ்வரர் 
துக்காச்சி குடந்தை நாச்சியார்கோயில் வட்டத்தில் நன்னிலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.





Thursday, February 16, 2017

அல்லல் போம் !!!  அன்னை வயிற்றில் பிறந்த துன்பம் போம்!!!

பிறவி பெருங்கடலை இறைவன் அருள் இன்றி நீந்துவது அவ்வளவு எளிதான  காரியமல்ல ......
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் மாணிக்கவாசகர் ....
ஞானிகளும் ,மகான்களும் மீண்டும் மீண்டும் பிறப்பதை விரும்பவில்லை ....அவர்கள் பிறவா தன்மை பெறவே 
விரும்பினர்......

அன்பர்களே மீண்டும் அன்னை வயிற்றில் பிறவா தன்மை அருளுவதால் இத்தலத்திற்கு கருவிலி என்ற சிறப்பு பெயர்..

குடந்தை --பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கருவிலி எனப்படும் இத்தலம் .....அழகிய நந்தவனத்துடன் கூடிய , மிக சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் உறையும் இறைவன் சர்குணேஸ்வரர் ....இறைவி சர்வாங்க சுந்தரி .......சுமார் 6 ஆடி உயரத்துடன் அற்புதமாக சேவை சாதிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும் ...

இத்தலத்தில் இப்பெருமானையும் , சர்வாங்க சுந்தரியையும் வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறப்பு என்பது கிடையாது ....

தேவார பாடல் பெற்ற முக்தி தலமாகிய இத்திருக்கோயிலை அன்பர்கள் அவசியம் தரிசித்து  பலன்   பெற வேண்டும் 



Tuesday, February 7, 2017

சிவநேய செல்வர்களின் சீரிய கவனத்திற்கு .....

ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , சித்தர்கள் என பலராலும் வணங்கி வழிபட பெற்ற பல்லாயிரக்கணக்கான திருமேனிகள் , பின்னர் வந்த மாமன்னர்கள் பலரால் போற்றி பாதுகாக்கப்பட்டு ,பிரம்மாண்டமான திருக்கோயில்கள்  அமைக்கப்பட்டு , வழிபாடு செய்யப்பட்டு வந்தது .......

இன்று கால மாற்றங்களினாலும் , அந்நியர்கள் படையெடுப்பாலும் , அவை நிர்மூலமாக்கப்பட்டு சீர்குலைந்து ,பெருமான் தன்னந்தனியே , வானம் பார்த்த திருமேனியராய் , திருக்கோயில் இன்றி , வழிபாடின்றி 
ஏராளமான திருமேனிகள் நம் தமிழகத்தில் காண கிடைக்கின்றன .....

நமது பொறுப்பின்மையும் இதற்கு ஒரு காரணம் .....

அன்பர்களே .....இதோ இங்கே பாருங்கள் .....வீடு கட்டப்படுவதற்காக இப்பெருமான் சாலை ஓரத்திற்கு வந்து விட்டார் ..

எங்கே இருக்கிறார் இவர் ?  
திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி வட்டம்,நேமம் வங்க நகர் செல்லும் சாலையில் , இளநகர் என்னும் கிராமத்தில் தான் இவர் சாலை ஓரத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார் ......

விவசாய கூலி வேலை செய்யும் எளிய மக்கள் வசிக்கும் பகுதி இது .

இந்நிலை கண்டு வருந்திய சிவபீடம் அமைப்பினர் இப்பெருமானுக்கு  மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ....

இத்திருப்பணியில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் சிவபீடம் நிறுவனர் திரு சிவ . முத்துராமன் அவர்களை அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ....

சிவ முத்துராமன்( www.sivapeedam.org)

சிவபீடம் 9443390589





Monday, January 30, 2017

விடமுண்ட கண்டன் கொலு வீற்றிருக்கும் விடையபுரம் --திருவாரூர் மாவட்டம் 


அன்பர்களே, மிக மிக தூய்மையான எண்ணெய் பிசுக்கற்ற திருகோவிலை காண வேண்டுமா?
இறை திருமேனிகளின் வஸ்திரங்கள் , மடிப்பு கலையாமல் ,இஸ்திரி செய்யப்பட்டது போல் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் அழகை காண உங்களுக்கு விருப்பமா?
கம்பீரமான மிகப்பெரிய இறைவுருவங்கள் கொலுவீற்றிருக்கும் திருகோயிலை பார்க்க விரும்புகிறீங்களா?
அனைத்திற்கும் மேலாக மகா பெரியவா ஆராதித்த மகத்தான சிவாலயத்தை காண ஆசையா?
அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டியது , திருவாரூர் மாவட்டம் , குடவாசல் வட்டம் , கொரடாச்சேரி( 4 கிலோமீட்டர் )அருகில் உள்ள விடயபுரம் கிராமத்திற்கு.

இச்சிறிய கிராமத்திலும் அதன் அருகிலும் எண்ணற்ற திருகோயில்கள் விளங்குகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட "திருவிடைவாய்" தலம் இதன் அருகில் தான் உள்ளது .

மிக்க வேதனை என்னவென்றால், இறைவன் அருள்செய்ய காத்திருந்தாலும், அவன் அருளை பெற பக்தர்கள் தயாராக இல்லை என்பதுதான் . அடியார் பெருமக்கள் அவசியம் காண வேண்டிய அற்புத திருகோயில் இது .

அர்ச்சகர் வீடு இத்திருகோயில் எதிரிலேயே அமைந்துள்ளது .

இப்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட அன்பர் திரு குமார் கண்ணும்  கருத்துமாக இத்திருக்கோயிலை பேணி  வருகிறார் ....இவரது அலைபேசி எண் தந்துள்ளேன் ....

இவரிடம் தொடர்பு கொண்டு இத்திருக்கோயிலை நீங்கள்  வசதியாக தரிசனம் செய்யலாம் ...

இங்கு உறையும் மீனாட்சி கம்பீரமான பேரழகு பொருந்தியவள் ....
இவளுக்கு திரு குமார் அவர்கள் செய்யும் அலங்காரம் காண கண் கோடி வேண்டும் அன்பர்களே ....

தவற விடாதீர்கள் ....
கண் நோய்கள் தீர்க்கும் கண் கொடுத்த வணிதம் தலம் மிக அருகில் இருக்கிறது ....

சென்று பலன் அடையலாம் .

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விடையபுரம், கண்கொடுத்த வனிதம் அஞ்சல், கமலாபுரம் வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர்- 610102.
திரு குமார் அவர்கள்
Contact No: 98 65 70 66 51





Wednesday, January 25, 2017

ஆபத்துகளை களைவார் ஆபத்சகாய ஈஸ்வரர் ........

அன்பர்களே .....திருவள்ளூர் மாவட்டம் , திருவள்ளூர் ஆவடி மார்க்கத்தில் உள்ள புட்லூர் நிறுத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தண்ணீர் குளம் கிராமம் .....

இங்கு பன்னெடுங்காலமாக வானமே கூரையாக வீற்றிருந்து அருள்பாலித்து வந்தார் ஸ்ரீ ஆபத்சகாய ஈஸ்வரர் ....
எத்தனை ஞானியர் , மகான்கள் வழிபட்டிருப்பர் இப்பெருமானை ?
இன்று அருகில் உள்ள அடியார் திரு உதயகுமார் அவர்கள் தினசரி பூசைகளை கவனித்து வருகிறார்....

இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைத்திட நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார் ......

பெருமான் திருவுளம் கனிந்திட தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது .....

இத்திருப்பணிக்கு பொருள் உதவி தேவை படுகிறது ......கிடைத்தற்கரிய இந்த சந்தர்ப்பத்தை அன்பர்கள் பயன் படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறோம் ....ஏனெனில் சிவாலய திருப்பணி நம் ஜென்ம ஜென்மாந்திர பாவங்களை நீக்கக்கூடியது ....

வங்கி கணக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது .....
M.udhayakumar  SBI bank thirunindravur branch A no 30330231064 IFSC code no
Ifsc code no SBI 010666

அலைபேசி எண் :9941496440



Wednesday, January 18, 2017

அற்புத பலன்களை அள்ளி  வழங்கும் அரிய திருக்கோயில்கள் 1

நவக்கிரஹ தோஷங்களை அடியோடு நீக்கும் திருத்தலம் .....
பிரம்மன் தான் பெருமானின் சிரசை கண்டதாக பொய்கூறியதால் ஏற்பட்ட தோஷத்தை இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி , இறைவன் பிரம்மபுரீஸ்வரரை வணங்கி போக்கிக்கொண்டான்.

எனவே இறைவன்பிரம்மபுரீஸ்வரர் எனஅழைக்கப்படுகிறார்...
நவக்ரஹங்களும் தங்கள் சாபத்தை நிவர்த்திசெய்து கொண்டன...
இங்கு நவக்ரகங்கள் ஒரே நேர்கோட்டில் இறைவனை எதிநோக்கி அமைந்திருப்பது சிறப்பு.....

சப்த விடங்க தலங்களில் திருக்குவளையும் ஒன்று.


திருக்கோளிலி எனப்படும் இத்தலம் தற்போது திருக்குவளை என அழைக்கப்படுகிறது .....
கோள்களால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதால் இப்பெயர் பெற்றது .....

இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கம் ..
இத்தகைய பழமையும் புராதன பெருமையும் உடைய திருத்தலங்களை தேடி தேடி சென்று தரிசித்தால் துன்பங்கள் நம்மை அண்டுவதற்கும் அஞ்சும் ......

அன்பர்களே சென்று தரிசனம் செய்யுங்கள் 

திருக்குவளை, திருத்துறைப்பூண்டியிலிருந்து கச்சனம் வழியாக எட்டுக்குடி செல்லும்வழியில்உள்ளது...




Friday, January 6, 2017

உருக்குலைந்த நிலையில் உமையொரு பாகன் திருகோயில்.
அன்பர்களே, தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகில் கோபுராஜபுரம் என்னும் சிற்றூர் உள்ளது.பாபநாசம் ரயில் பாதையை கடந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல இந்த கிராமத்தை அடையலாம் 
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் ஸ்வர்ணபுரீஸ்வரர் என்பதாகும் .இன்று மிகவும் 
உருக்குலைந்த நிலையில் உள்ளது .

தனித்து விளங்கும் இறைவியின் திருகோயில் முற்றிலும் சிதைந்து விட்டதால் எம்பெருமானுடனேயே எழுந்தருள செய்துள்ளார்கள் .

இங்கு அருள்பாலிக்கும் குபேர லிங்கத்தை உள்ளன்புடன் வழிபட, வறுமை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்
என உறுதியுடன் கூறுகிறார்கள் உள்ளூர் பெருமக்கள் .

பழமையும் பெருமையும் பொருந்திய இத்திருகோயில் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே
அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது 



Thursday, January 5, 2017

காசிக்கு நிகரான காலபைரவ ஷேத்திரம் ......



காசிக்கு நிகரான தலங்கள் , காசிக்கு வீசம் அதிகமான தலங்கள்  என பல தலங்கள் அறியப்பட்டதுண்டு .....

காசியில் இறப்பவர்க்கு எம வாதனை கிடையாது ....ஆனால் பைரவ தண்டனை உண்டு ...
ஆனால் இங்கு வந்து சப்த ரிஷிகள் வழிபட்ட ஞானாம்பிகை சமேத  ரிஷீஸ்வரரை வணங்கினால் , இங்கு உறையும் பைரவரை வழிபாடு செய்தால் இவை இரண்டுமே கிடையாது ....

இதன் மூலம் இத்தலத்தின் பெருமையை அறியலாம்....

அத்தலம் தான் குடந்தை அருகில் மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ள அம்மாசத்திரம் ஆகும் ....

அருகிலேயே திருபுவனம் ,  .திருவிடைமருதூர் போன்ற புகழ் மிக்க தலங்கள் சூழ அமைந்துள்ளது .....

இங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் கால பைரவ பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது .....அவ்வமையம் திரளான மக்கள் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள் ....

காசியை போலவே  கும்பகோணத்திலும் 8 திக்குகளிலும் 8 விதமான பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர் ....
சப்த ரிஷிகளும் சிவபெருமானுக்கு திருமணம் செய்வித்த தலம் என்பதால் , இது திருமண தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது ....

அன்பர்களே , பிதுர் கடன்களை முறையாக செய்ய தவறியவர்கள் இங்கு வந்து வணங்குவதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் ...

இத்தலத்தின் பெருமை பவிஷ்ய புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது ...
மிகவும் சுத்தமாகவும் , நேர்த்தியாகவும் பராமரிக்கப்படும் திருக்கோயில்களில் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்..

இத்திருக்கோவிலில் உள்ள காலபைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷ அம்சமாகும்

திருக்கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்:

• சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு திருமணம் பேசி முடித்த திருத்தலம்.
• பஞ்சலிங்கங்கள் மற்றும் பஞ்சசக்திகள் அருள்பாலிக்கும் திருத்தலம்
• நவகிரஹ இயந்திர மண்டலம் விளங்குவது ஆகியவை ஒரே கோவிலில் அமைந்திருப்பது என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு.

 இங்கு இறைவன் அஷ்ட பைரவ ரூபியாக  இருந்து கும்பகோணத்தை காவல் காப்பதாக சம்பிரதாயம் உண்டு.
குடந்தையிலிருந்து 7 கிலோமீட்டரில் உள்ளது இத்தலம் 


இத்தகைய  பெறற்கரிய இத்தலத்தை குடந்தை செல்லும் அன்பர்கள்  தவறாமல் தரிசனம் செய்து பலன் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு ..